தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தூய்மை பணியாளர்களின் நிலையே வேட்டை தடுப்பு காவலர்களுக்கும் ஏற்படும்" - முத்தரசன்! - ANTI POACHING GUARDS

வேட்டை தடுப்பு காவலர் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் வன பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

வேட்டை கடுப்பு காவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
வேட்டை கடுப்பு காவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 2:01 PM IST

Updated : Nov 23, 2024, 2:11 PM IST

கோயம்புத்தூர்:வேட்டை கடுப்பு காவலர்கள் 10 ஆண்டுகள் கழித்து நிரந்தர பணியாகும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில், அவர்களது பணியை தனியார் வசம் ஒப்படைத்தால், தூய்மை பணியாளர்களுக்கு ஏற்பட்ட அபாயம் இவர்களுக்கும் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் காப்புக்காடுகள், வன விலங்கு சாரணாலயங்கள் மற்றும் வன விலங்கு வேட்டையை தடுக்க வேட்டைத் தடுப்புக் காவலர்களாக 1500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொடர்ந்து 10 வருடம் பணியாற்றினால் சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், வனத்துறையில் உள்ள வேட்டை தடுப்பு காவலர் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதனை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு இடங்களில் முறையிட்டு வருகின்றனர்.

வன பாதுகாவலர்களுடன் முத்தரசன் (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், முதுமலை, மேகலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு புலிகள் காப்பகங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், கோவை மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியத்திடம், வேட்டை தடுப்பு காவலர் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: அரசுக்குக் கடிதம் - மதுரை ஆட்சியர் உறுதி!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது, “வனத்துறையில் பணியாற்றக்கூடிய வேட்டை தடுப்பு காவலர்கள், பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். சட்டவிரோத வனவிலங்கு வேட்டையை தடுப்பது, வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை திருப்பி அனுப்புவது, வனவிலங்குகளை பாதுகாப்பது, காடுகளில் கண்காணிப்பு கேமராக்ளை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

முத்தரசன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

வேட்டை தடுப்பு காவலர்கள் பலரும் பட்டதாரிகள். குறிப்பாக, பழங்குடியின மலைவாழ் பகுதியை சார்ந்தவர்கள் தான் வேட்டை தடுப்பு காவலர்களாக உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இந்த பணியை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இவர்களுக்கும், வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். எனவே, தமிழக அரசு இந்த போக்கை கைவிட வேண்டும்.

வேட்டை கடுப்பு காவலர்கள், 10 ஆண்டுகள் கழித்து நிரந்தர பணியாகும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக அரசு முடிவு எடுத்துள்ளது. தூய்மை பணியாளர்கள், பணி ஒப்பந்த அடிப்படையில், குறைந்த ஊதியத்தில் வேலை செய்வது போன்ற அபாயம் இவர்களுக்கு ஏற்படும். அரசு கருணையுடன் இவர்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 23, 2024, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details