சென்னை: சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இது என்ன நாகரீகம்?:அப்போது பேசிய அவர், '' சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளை கன்னியாகுமரியில் காங்கிரஸ் இயக்கம் கொண்டாட உள்ளது. அண்ணாமலை துக்கம் விசாரிக்கும் இடத்தில் அரசியல் பேசலாமா? சாவு வீட்டிற்குச் சென்று பாஜக அரசியல் பேசுகிறார். பத்திரிகையாளர்களை முறைக்கிறார். இது என்ன நாகரீகம்? என சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று வந்த பின்னர் அண்ணாமலை பேசியதை விமர்சித்து செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை? தொடர்ந்து பேசிய அவர், ''எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், திருச்சி சிவா, தமிழிசை சௌந்தரராஜன், நிர்மல் குமார் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் ஏன் அண்ணாமலை மௌனமாக இருக்கிறார்? சொந்த கட்சிக்காரர்களையே வார் ரூம் மூலமாக கண்காணிப்பது, அவருக்கு மேல் வளர்கிறவர்களை மட்டம் தட்டுவது, துரோகம் செய்வது போன்ற ஹனிட்ராப் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை?'' என்றார்.
மேலும், ''ஆருத்ரா தொடர்பாக நாங்கள் பேசியதும் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. என்னை ரவுடி என கூறுகிறார். ஒரு தலித் மீது அவதூறு பேசினால் என்ன நடக்கும் என தெரியும். பல தலித் தலைவர்கள் என்னை அழைத்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் கொடுக்கப் போகிறோம்'' என கூறுகின்றனர்.
அரசியல் நாகரீகம் கருதி நான் வேண்டாம் என்று கூறியிருக்கிறேன். நாங்கள் இதற்கு புகார் கொடுத்தால், நீங்கள் சிறைக்குச் செல்வதை தவிர்க்க முடியுமா? அண்ணாமலை உத்தமபுத்திரன் என்றால் ஆங்கில பத்திரிகையில் வந்த கட்டுரையைக் காட்டி, என் மீது மான நஷ்ட வழக்கு போட முடியுமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
பாஜகவில் 124 ரவுடிகள்?: அதனைத் தொடர்ந்து, ''அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்து தேர்ச்சி பெற்றார்? எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்து விட்டு சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறார். என்னை ரவுடி என்று சொல்கிறாயே, எங்கேயாவது, ஒரு இடத்திலாவது வழக்கிலாவது என்னை குற்றவாளி என நிரூபிக்க முடியுமா? எனக்கூறி, தமிழ்நாடு பாஜகவில் 124 ரவுடிகளின் பட்டியலை காட்டி, அவர்கள் மீது 834 வழக்குகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.