தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மக்கள் ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல" - திருச்சி பரப்புரையில் டிடிவி தினகரன் அறிவுரை - lok sabha election 2024

TTV Dhinakaran: கொலை வழக்கிலும், மணல் கடத்தலிலும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர்களை நம்பி மக்கள் ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 1:07 PM IST

TTV Dhinakaran
டிடிவி தினகரன்

திருச்சி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவு தெரிவித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில், டிடிவி தினகரன் பேசியதாவது, "பிரதமர் மோடி 3-ஆவது முறையாக வெற்றி பெற வேண்டும். நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருக்கலாம் என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் துணிச்சலாக சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், 1977ல் அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பாலுச்சாமியின் மகன்.

அதேபோல், மதுரையில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம.சீனிவாசனை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மருத்துவர் சரவணன். 2014ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த நிலையில், இடைத்தேர்தல் வேட்பாளர் படிவத்தில் இருந்த கை ரேகையை, அவருடையது இல்லை, அவர் உயிருடன் இல்லை என்றும் கூறி வழக்கு தொடர்ந்தவர். தற்போது மதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளராக நிறுத்திய சிம்லா முத்துச்சோழனை மாற்றி வேறு வேட்பாளரை நிறுத்தினார். அதிமுகவின் நிலை இப்படித்தான் இருக்கிறது. ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் அங்கு இருப்பதாக நினைப்பவர்கள், இந்த தேர்தலோடு அதற்கு முடிவுரை எழுதுவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்திருப்பது எங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக இல்லை. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு பதவியை வாங்கியிருக்க முடியும். ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த பன்னீர்செல்வத்திற்கும் பதவி வேண்டும் என்ற ஆர்வத்தில் இல்லை.

துரோகிகளிடம் இருக்கும் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு, தொண்டர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கிறோம். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கொலை வழக்கிலும், மணல் கடத்தலிலும் தொடர்புடையவர்களை வேட்பாளராக்கியுள்ளார். அவர்களிடம் மக்கள் நீங்கள் ஏமாந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

தமிழகத்தில் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டீர்கள். மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அவர்களது குடும்பங்கள் மட்டும் நன்றாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான திட்டங்களை பெற்றுத்தர, அமமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க:"ஏப்.19 அன்று வீட்டில் சீரியல் பார்க்காமல் விரைவாக சென்று வாக்கு செலுத்துங்கள்" - பரப்புரையின் போது அமைச்சர் அட்வைஸ்! - Lok Sabha Election

ABOUT THE AUTHOR

...view details