சென்னை:தேர்தல் பரப்புரையின் போது இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு மறுபங்கீடு செய்யும் என்று கூறியதோடு, நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மை சமூகத்தினருக்கு முதல் உரிமை உண்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாகவும் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது" இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல்"- பி.டி.ஆரின் எக்ஸ் பதிவுக்கு என்ன காரணம்?