தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 11:48 AM IST

ETV Bharat / state

தேனியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம்: முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் குற்றச்சாட்டு!

Measles Affected girl dies: அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறி சிறுமியின் உடலுடன் தாய் மற்றும் உறவினர்கள் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குருசாமி. இவர் அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் 6 வயது மகள் அர்ச்சனா ஆகியோர் சொந்த ஊரான ஒக்கரைபட்டியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சிறுமி அர்ச்சனா, அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியைத் தொடர்ந்து, சிறுமி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் தங்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, பின்பு அங்கிருந்து நேற்று இரவு (பிப்.8) ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு உடனடியாக முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம் சாட்டி சிறுமியின் தாய் பாண்டீஸ்வரி மற்றும் உறவினர்கள் சிறுமியின் உடலுடன் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து சிறுமியின் உடலை வாங்கிக்கொண்டு உறவினர்கள் சொந்த ஊரான ஒக்கரைப்பட்டிக்கு சென்றனர்.

இது குறித்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பிரேமலதாவிடம் கேட்ட போது, "அம்மை நோயால் கடந்த ஐந்து நாட்களாக பாதிக்கப்பட்ட சிறுமி, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் முறையாக சிகிச்சை பெறாமல் மோசமான நிலையில் கொண்டுவரப்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஓசூரில் தொடரும் காப்பர் வயர் திருட்டு; ஒரே மாதத்தில் 4 டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details