சென்னை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், சமீபத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், "உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கண்ணிய குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட நீதிபதி, மற்ற வழக்கறிஞர்கள் மீதும், வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் அடிக்கடி இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார். நீதிமன்ற விசாரணைக் காட்சிகளை பதிவு செய்து வெளியிட தடை செய்யப்பட்ட நிலையில், இந்த வீடியோ காட்சிகள் எப்படி வெளியானது? என்பது குறித்து விசாரிக்கும்படி தகவல் தொழில்நுட்ப பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை சாதாரண மனிதர்கள் பார்த்தால் நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு என்ன மாதிரியான எண்ணங்கள் தோன்றும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மூத்த நீதிபதியின் இந்த நடத்தை சார்ட்டர்டு நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, வழக்கறிஞர்கள் தங்கள் சுயமரியாதையையும், கண்ணியத்தையும் ஏன் தியாகம் செய்ய வேண்டும்" எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.