தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக ஆபிஸில் தோட்ட வேலைக்குகூட ஓபிஎஸ் செல்வார்.. விந்தியா கடும் சாடல்!

Actress Vindhya: திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகை விந்தியா, வாரிசு கூட்டத்தால் இயங்கும் கட்சியாக திமுக செயல்படுகிறது என்றும், ஓபிஎஸ் இருக்கும் நிலையில் பாஜக அலுவலகத்தில் தோட்ட வேலைக்கு அழைத்தால்கூட சென்று விடுவார் என்றும் விமர்சித்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 1:24 PM IST

நடிகை விந்தியா
நடிகை விந்தியா

நடிகை விந்தியா தாக்கு

திருச்சி:மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்‌.

அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக என்றும் மக்கள் குடும்பம் போல் உள்ளது. அதை பிரிக்க நினைப்பவர்களுக்கும், அழிக்க நினைப்பவர்களுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம். இரட்டை இலை சின்னம் மக்கள் சின்னம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, திமுகவை விரட்டியடிப்பார்கள். தமிழக மக்களையும், அதிமுக கட்சியையும் வழி நடத்த தெரிந்த ஒரு நல்ல தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சபாநாயகர் பேச விடாமல் தடுக்கிறார்:சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். சட்டப்பேரவையில் திட்டம் என்ற பெயரில், மட்டமாக எதையாவது பேசுகிறார்கள். அதை எதிர்த்து எதிர்கட்சிகள் கேள்வி கேட்டால், சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேச விடாமல் தடுக்கிறார்.

வாரிசு கூட்டத்தால் இயங்கும் கட்சி:சட்டப்பேரவையில் உள்ள திமுகவினரெல்லாம் யார் என்று பாத்தால், கருணாநிதியின் மகன், ஸ்டாலினின் மகன், ஐ.பெரியசாமியின் மகன், டி.ஆர்.பாலுவின் மகன், பொய்யாமொழியின் மகன், நாடாளுமன்றத்தில் பார்த்தால், கருணாநிதியின் மகள், தங்கபாண்டியனின் மகள், முரசொலி மாறனின் மகன், ஆற்காடு வீராசாமியின் மகன், துரைமுருகன் மகன் என வாரிசு கூட்டத்தால் இயங்கும் கட்சியாக திமுக செயல்படுகிறது.

பட்ஜெட்டில் ஊழல்:திமுக மூத்த நிர்வாகிகளின் வாரிசுகள் சட்டமன்ற உறுப்பினர் ஆகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் பதவியில் உள்ளனர். பொய்யான பல கம்பி கட்டும் கதைகளைச் சொல்லி, திமுகவினர் மக்கள் மனதை குழப்பி ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்தால், தமிழகமே திரும்பிப் பார்க்கும் நிலை ஏற்படும். அதில் மக்களுக்கான நலத்திட்டங்கள் அதிகமாக இடம்பெறும். ஆனால், திமுக தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஊழல் மட்டும்தான் இருக்கிறது.

பாதுகாப்பில்லாத ஆட்சி:தமிழகத்தில் கடலை மிட்டாய் போல் இப்போது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. அதற்கு ஆதரவாக திமுக அரசு உள்ளது. காவல் துறைக்கும், பத்திரிகை ஊடகத்துறைக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சியை நடத்துகிறது, திமுக. நதிகளை சுத்தம் செய்வோம், பூங்காக்கள் அமைப்போம் என நிதி ஒதுக்கினார்கள்.

ஆனால் எதுவும் செய்யவில்லை. கார்ப்பரேசனுக்கும், பாஜகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கார்ப்பரேசன் வண்டி நாய் பிடிக்க வரும். பாஜகவின் வண்டி ஆட்களை பிடிக்க வரும். தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களது ஆட்சியில் அதிமுக செய்த சாதனைகளை எடுத்துக் கூறி, பாரதிய ஜனதா கட்சிற்கு வாக்கு சேகரித்து பேசினார்.

அண்ணாமலை வீடியோ எடுக்க சென்றிருக்கலாம்: ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அது தெரியாமல் அதிமுக கட்சியையும், மூத்த நிர்வாகிகளையும் தவறாகப் பேசி கூட்டணியை முறித்துக் கொண்டார். ஸ்டாலினுக்கும், அண்ணாமலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஸ்டாலின் விடியல் தரேன், விடியல் தரேனு உதார்விட்டுக்கிட்டே சுற்றுவார். அண்ணாமலை கூட இருப்பவர்களையே வீடியோ எடுத்து வெளியில் விட்டு சுற்றுவார். இவர் கட்சித் தலைவராக இருப்பதற்கு பதிலாக, எங்காவது வீடியோ எடுக்க சென்றிருந்தால் கூட பெரிய ஆளாக வந்திருப்பார்.

நேற்று முளைத்த புல்:தற்போது ஓபிஎஸ் இருக்கும் நிலையில், பாஜக தோட்ட வேலைக்கு அழைத்தால் கூட சென்று விடுவார். அதிமுக என்பது 52 வருடம் வாழ்ந்த ஆலமரம், இதை நேற்று முளைத்த புல்லான அண்ணாமலை, அசைத்து பார்க்க நினைப்பது முட்டாள்தனம்” என்று தெரிவித்தார். விழாவிற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

இதையும் படிங்க:"பாஜக தலைமையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.."- கூட்டணி குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details