கரூர்: 1910 ஆண்டு வரை கரூர், கோவையின் ஒரு பகுதியாகவும், பின்னர் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது. அதன் பின்னர், 1996ஆம் ஆண்டு தான் கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த காலத்தில் கரூரில் காவிரி, அமராவதி ஆகிய இரண்டு ஆறுகளும் வற்றாத ஜீவ நதியாய் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அமராவதி ஆற்றுப் பாலம் உருவான கதை: குறிப்பாக, அமராவதி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் ஆற்றைக் கடந்து மறுபக்கம் செல்ல மிகவும் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கிராமப்புறங்களில் இருந்து கரூர் நகர் பகுதிக்குச் செல்ல உதவும் வகையில், 1919ஆம் ஆண்டு பாலம ஒன்று கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
சுமார் ஐந்து ஆண்டுகள் கட்டுமான பணிகளுக்கு பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 1924ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி, அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுண்ட் கோஸ்சென் ஹாக்கார்ஸ்ட் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்த பாலத்திற்கு திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி என்பவரது பெயர் சூட்டப்பட்டது.
பின்னர், அந்த பாலம் அமைந்திருந்த பகுதி 'லைட் ஹவுஸ் கார்னர் பாலம்' என்று மக்களால் அழைக்கப்பட்டது. அதன் பின்னர், 2001ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, இந்த பாலத்தின் அருகே புதிய அமராவதி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது.
அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு ஒரு வழி பாதியாகவும், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு பழைய அமராவதி ஆற்றுப்பாலத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் இருவழி போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டப்பட்டவுடன் அமராவதி ஆற்றுப் பாலம் கரூரின் அடையாளச் சின்னமாக மட்டுமே இருந்தது.