தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 2:43 PM IST

ETV Bharat / state

கிராமத்து இளைஞர் டு ஜப்பான் நாட்டு தூதர்... விழுப்புரத்துக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன்! - Embassy of Japan to India

villupuram chandru: விழுப்புரம் அருகே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் படிப்படியாக உயர்ந்து இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டின் தூதராக நியமினம் பெற்று தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

ஜப்பான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சந்துரு
ஜப்பான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சந்துரு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் திகழ்கிறது. அரசு உயர் பதவிகளிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக்கூடிய திட்டமான சந்திராயன் – 2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்பர் – புனிதா தம்பதியின் மகன் சந்துருவை (42) ஜப்பான் நாட்டின் தூதராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்து, பின்னர் காரைக்குடியில் பிஎஸ்சி விவசாய பட்டப்படிப்பை முடித்தவர். தொடர்ந்து டெல்லியில் எம்எஸ்சி அக்ரி, பிஹெச்டி படிப்பை முடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, 2009-இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதிய சந்துரு, 2-வது முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐஎப்எஸ் பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்து சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை இலங்கையில் இந்தியாவிற்கான தூதரக அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதரக அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார். 2020-ல் இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவரை ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதி தூதராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான மூன்று துணை தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமையை சேர்த்துள்ளது.

இதையும் படிங்க: மூன்று நாட்கள் நீலகிரிக்கு சுற்றுலா வருவதை தவிர்க்கலாம்” - ஆட்சியர் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details