அடிலெய்டு:ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. பகலிரவு ஆட்டமாக (பிங்க் பால்) நடைபெற்ற இப்போட்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியா 337 ரன்களை எடுத்தது.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 175 ரன்களில் சுருண்டது. 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்த எளிய இலக்கை எட்டி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
குறிப்பாக, ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தில் கூடுதல் ரன்கள் எடுக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களின் நம்பி்க்கை தகர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பந்துவீச்சு. அவர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக் முடியாமல், ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மீதமிருந்த 5 விக்கெட்களையும் இந்தியா பறிகொடுத்தது.