தமிழ்நாடு

tamil nadu

"தோலை துளைத்த தோட்டா.. பீறிட்டு வெளியேறிய ரத்தம் கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன்"- டிரம்ப் உதிர்த்த வார்த்தைகள்! - Donald Trump Shot

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 1:35 PM IST

விசிலின் சத்தத்தை கிழித்து கொண்டு தனது காத்தின் தோல் பகுதியை துப்பாக்கி குண்டு துளைத்ததும் ரத்தம் பீய்ச்சி அடித்து வெளியேறியதை தான் உணர்ந்ததாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Donald Trump (AP Photo)

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சிலிவேனியாவில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். டிரம்ப்பின் காது பகுதியில் தோலை கிழித்து கொண்டு துப்பாக்கி குண்டு சென்றது. இதையடுத்து அருகில் இருந்த பாதுகாவலர்கள் டிர்மப்பை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் டிரம்ப் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனது சமூக வலைதளமான ட்ரூத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வலது காதின் மேல் பகுதியில் துளையிட்ட தோட்டாவால் தான் சற்று நேரத்தில் நிலை குழைந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது ஏதோ ஒரு சத்தம் மற்றும் துப்பாக்கிச் சூடு கேட்டது என்றும் அதன் பின் தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தோட்டா தனது காதின் மேல் பகுதியை துளைத்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதை தான் உணர்ந்ததாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மேடையின் கீழ் தான் சரிந்ததாகவும் சுற்றி இருந்த பாதுகாவலர்கள் தன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அடையாளம் கண்ட அமெரிக்க எப்பிஐ போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் மீது தொடர் துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூ, மேடையின் அருகில் இருந்த ஒருவரையும் சுட்டுக் கொன்றார். மேலும் இந்த சம்பவத்தில் மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் தாமஸ் மேத்யூவை சுட்டு வீழ்த்தினர்.

இதில் தாமஸ் மேத்யூ உயிரிழந்தார். என்ன காரணத்திற்காக தாம்ஸ் மேத்யூ துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவராத நிலையில், அது குறித்து எப்பிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் பைடன், இது போன்ற குற்றங்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட சதியா? சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? - Donald Trump Shooting

ABOUT THE AUTHOR

...view details