சென்னை: கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோர் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். தமிழ் அன்னை தமிழ் ஊட்டி வளர்த்த மற்றுமொரு தவப்புதல்வனான இவர், கோலிவுட்டில் 1999ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்திலேயே மின்சார கண்ணா படத்தில் "ஓ அங்கிள்" பாடல் உள்ளிட்ட பல பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் மையம் கொண்டு இருந்த தமிழ் திரையிசை பாடல்களை தனது இன்பத்தமிழால் தாலாட்டியவர்.
நா.முத்துக்குமார் அறிமுகம்: இந்த காஞ்சிபுரத்துக் கம்பன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இதே தினத்தில் நா.முத்துக்குமார் என்ற மகா கலைஞன் நீண்ட உறக்கத்திற்கு சென்றார். கவிஞர் நா.முத்துக்குமார் தனது வாழ்வியலில் இருந்து அனுபவங்களில் இருந்து பாடல்களை எழுதினார்.
நா.முத்துக்குமார் கவிதை:தனது கவிதைகளில் பல புதுமைகளை புகுத்தினார். காதல், காமம், கண்ணீர், நட்பு, பாசம் என அத்தனை மனித உணர்ச்சிகளுக்கு உருவகம் கொடுத்து பாடல்கள் எழுதினார். அதேபோல் நா.முத்துக்குமார் தனது 'தூர்' என்ற கவிதை மூலம் மிகப் பெரிய கவனம் பெற்றார்.
நா.முத்துக்குமார் எவர்கிரீன் பாடல்கள்:சிறுவயதில் புழுதிக் காட்டில் சுற்றித் திரிந்த நினைவுகளை தனது "வெயிலோடு விளையாடி" பாட்டில் காட்சிப்படுத்தினார். காதல் தோல்வியின் வலியை விட இவரது "போகாதே, போகாதே", "நினைத்து நினைத்து பார்த்தேன்" பாடல் வரிகளை கேட்டால் இன்னும் அதிகம் வலியை ஏற்படுத்தும்.
ஒரு நாளில்: புதுப்பேட்டை படத்தில் "ஒரு நாளில்" பாடலை கேட்டால் நிச்சயம் புது மனிதனாக நாளை விடியும் கிழக்கு என்று உற்சாகம் மனதில் பொங்கும். "எத்தனை கோடி கண்ணீர் மன் மீது விழுந்து இருக்கும், அத்தனை பார்த்த பின்பும் பூமி இன்னும் பூ பூக்கும்" என நா.முத்துகுமாரின் வார்த்தைகள் நம்பிக்கை உரமேற்றும். இப்படி பல பாடல்களில் பேனா முனையில் ஒரு பெருந்துயரை கடந்து வர செய்திருப்பார். அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையும் இசைந்து கொடுக்கும்.