டி.பி.கஜேந்திரனைக் கண்டாலே ஒரு உத்வேகம் வரும் - தம்பி ராமையா - Thambi Ramaiah Comments
🎬 Watch Now: Feature Video
சினிமா துறையில் தனக்கென நீங்கா இடம்பிடித்த பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன்(72). இன்று (பிப்.5) சென்னையில் காலமானார். இவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் நேரில் சென்று மரியாதை செய்தனர்.
அந்தவகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் தம்பி ராமையா ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் உள்ளிட்ட பன்முகத்தன்மையுடன் வாழ்ந்தவர் டி.பி.கஜேந்திரன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் விருதுகளை பெற்ற சிறந்த இயக்குநரையும் குணச்சித்திர நடிகரையும் தமிழ் சினிமா இழந்துள்ளது. அஇஅதிமுக சார்பில் அண்ணாருக்கு மரியாதை செய்யப்பட்டது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ’இவரின் இழப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புதான். இவரது நகைச்சுவையை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். டி.பி.கஜேந்திரன் தமிழ்நாட்டில் நிறைய திரைப்படங்களை இயக்கி சாதனைப் படைத்துள்ளார். இவரின் இழப்பு தமிழ்நாட்டில் சினிமாத் துறையினர் உட்பட எல்லோருக்கும் பெரிய இழப்பாக அமையும். அவர் இல்லாவிட்டாலும் அவரது படைப்புகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, 'திரையுலகில் அடுத்தடுத்து சோகங்கள் நிகழ்ந்துள்ளன. சாந்தமான குரல் வளம் கொண்ட வாணி ஜெயராம் அம்மையாரை இழந்துள்ளோம். அவரைத்தொடர்ந்து டி.பி.கஜேந்திரன் மரணம் என செய்தி வந்தது அதிர்ச்சியை தந்தது. சினிமா துறையில் அவர் ஒரு மனிதன். தனது உயரத்தை தாண்டிய வளர்ச்சியை அடைய முடியுமா? என தன் மீது யாரும் சுயப் பிரசாரம் பண்ணிவிடக் கூடாது என்றிருந்தார். தாழ்வு மனப்பான்மையுள்ள எவருக்கும் இவரைக் கண்டவுடன், எனக்கென்ன குறைச்சல் என ஒரு உத்வேகம் வரும். யாரையும் எதிர்பாராமல் சுயமாக தனது கடினமான உழைப்பால் தனது நான்கு பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்ததோடு, அவர்களுக்கு நல்ல தந்தையாக, நல்ல மாமனாராக, நல்ல தாத்தாவாக அவர் இருந்தார். மேலும், முதலமைச்சரின் உற்ற நல்ல நண்பராகவும் திகழ்ந்தார். நிச்சயமாக அவரது ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாறும்' எனத் தெரிவித்தார்.