விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அழகன்குப்பம் என்ற இடத்தில் ரூ.235 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. பின்னர், ஆரம்ப கட்ட நிலையிலேயே மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டன.
இதனால், கடலில் நிறுத்தி வைக்கப்படும் பெரிய படகுகள் அடிக்கடி கடலில் தரை தட்டுகிறது. கடலில் அவைகள் மூழ்கிவிடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், கிடப்பில் போடப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மரக்காணம் மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி கூனிமேடுக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (செப்.15) மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: வெல்டிங் பட்டறையில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு