வேலூர்: அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும் வேலூர் மாவட்டச் செயலாளருமானை ஏ.பி.நந்தகுமார் தலைமையில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுக எம்.எல்.ஏவும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 150 ஏழைப்பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 100 சலவைத்தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள் எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், தற்போது முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிறிய உடல் நலப்பாதிப்பு குணமடைய அனைவரும் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என கூறியதையடுத்து கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தனர்.
அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'வேலூர் என்றால் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் முகம் தான் நியாபகத்திற்கு வரும். என்னை தூக்கி வளர்த்தவர் அமைச்சர் துரைமுருகன். எனக்கும் வேலூர் மாவட்டத்துக்கும் ஒரு நெருக்கம் உண்டு. நான் இளைஞரணிச்செயலாளர் ஆகும் முன்பே வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளேன்.
அணைக்கட்டே இல்லாத ஊருக்கு அணைக்கட்டு என பெயர் உள்ளதாக எம்.எல்.ஏ நந்தகுமார் சட்டமன்றத்தில் பேசுவார். ஆனால், தற்போது 50 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த ஆட்சியில் மனு கொடுத்தால் நல்லது நடக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதை தொடர்வோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
தந்தை பெரியாரையும், அண்ணாவையும் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இங்கு பொற்கிழி பெற்ற கழக முன்னோடிகளை தந்தை பெரியார், அண்ணா, பேராசியர், கலைஞர் ஆகியோரின் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன். அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி செல்ஃபி எடுக்க வேண்டும் என ஆசை தான். ஆனால் நேரம் போதவில்லை' என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேலும் விழா முடிவில் ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி தம்பதியினர் கேட்டதற்கு தனது சகோதரி செந்தாமரையின் பெயரை அந்தப் பெண் குழந்தைக்கு சூட்டினார். மேலும் நிகழ்ச்சியில் பாடகர் மூக்குத்தி முருகன் பாடல் பாடியவாரே உதயநிதி ஸ்டாலினின் படத்தை வரைந்து அவரிடம் கொடுத்தார்.
இதையும் படிங்க: பன்னீர்செல்வத்திற்கு தொலைபேசியில் நன்றி கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!