கரோனா தீநுண்மி பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிவருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்குப் பொதுமக்கள் புகார்கள் அளித்துவருகின்றனர்.
அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கண்டுபிடித்து கைது செய்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக விருதம்பட்டு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில் பல்லு (எ) ஜெயமணிகண்டன் (32), காளியப்பன் (28) இருவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த 60 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல்செய்தனர்.
அதைத்தொடர்ந்து காவல் துறையினர் காட்பாடி அறுப்புமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்றுவந்த சர்தார் (41) என்பவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல்செய்தனர்.
அதன்பின் காவல் துறையினர் மொத்தமாக அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட 90 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முயன்ற கஞ்சா வியாபாரி கைது