திருச்சி: சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த படியாக இரண்டாவது சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது.
அதேபோல், விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக சமீபகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் கரன்சி நோட்டுகளை கடத்திக் கொண்டு செல்வதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய முனையம் முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் பயணிகளில் ஒருவரது பை மற்றும் பர்ஸ் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் சுமார் 170 எண்ணிக்கை கொண்ட 100 அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் அவரிடம் இருந்த கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 13 லட்சத்து 82 ஆயிரத்து 950 ஆகும்.
பின்னர், அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரன்சி நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா, பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா, வேறு வழக்குகள் எதுவும் அவர் மீது உள்ளதா, இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள், எந்த நோக்கத்திற்காக கரன்சிகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு.. பலே கும்பல் சிக்கியது எப்படி?