துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் சரீப் (23) என்பவர் கொண்டுவந்த லேப்டாப் மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து லேப்டாப்பை பிரித்து அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் 12 தங்கப் படலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 326 கிராம் எடையுள்ள தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும் அவரிடம் இருந்து 19 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து யாசர் சரீப்பிடம் அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளையும், பயணிகளின் உடைமைகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அரியலூரைச் சேர்ந்த முகம்மது அசாருதீன் (22) என்ற பயணி உடமையை சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5,350 கனடா டாலர், 1,250 யூரோ, 850 சுவிஸ் பிரான்க்ஸ் என இந்திய மதிப்பில் 4.53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அசாருதீனை கைது செய்த அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!