விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நகை ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும், வெங்காயத்தை அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் விற்க வேண்டும், மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டத்தையும் காவிரி - குண்டாறு -வைகை இணைப்பு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஜங்சன் அருகே இப்போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 8ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது நாள் விவசாயிகள் கோவணம் அணிந்து, பட்டை நாமம் போட்டு, ரத்தக் கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4ஆவது நாள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 5வது நாளான நேற்று விவசாயிகள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறாவது நாளான இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை எடுத்துக் கூறும் வகையில் பிணம் போல் வேடமிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம்