இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் இன்றைய நிலையில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால், அது உழவர்கள் தான். அவர்கள் பயிரை சாகுபடி செய்யும் போது இயற்கைச் சீற்றங்களின் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர். சாகுபடி செய்து முடித்த பிறகு அவற்றுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உழவுத்தொழிலை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தவாறு வேளாண் விளைபொருட்களுக்கு, அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு விட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அது உற்பத்திச் செலவுகளை முழுமையாக சேர்க்காமல் கணக்கிடப்பட்டது என்பதால், அது எந்த வகையிலும் உழவர்களுக்கு பலன் அளிப்பதாக அமையவில்லை.
தமது பரிந்துரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று எம்.எஸ்.சுவாமிநாதனே தெரிவித்திருக்கிறார்.
கொள்முதல் நிலையங்கள் போதுமான எண்ணிக்கையில் அமைக்கப்படுவதில்லை என்பதும் உண்மை ஆகும். தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களில் போதிய கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படாததால், உழவர்கள் தாங்கள் விளைவித்த நெல்லை சாலைகளில் கொட்டி, இரவுபகலாக காவல் காக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றப்பட்டால் தான் உழவர்களின் துயரம் தீரும்.எனவே, நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்; எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளின்படி உழவர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இவை உழவர்கள் விரும்பும் வரை நீடிப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.