திருப்பத்தூர்: ஆலங்காயம் அடுத்த பூங்குளம் மாஞ்சோலை வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன்கள் தமிழரசன், முரளி இருவரும் தங்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முரளி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த முரளியின் மனைவி குடும்பத்தினருக்கும், தமிழரசனின் குடும்பத்திற்கும் நிலத்தகராறு ஏற்பட்டு அவ்வப்போது வாக்குவாதம் நடைபெற்றதாகவும் அப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது.
தமிழரசன் மரணம்
நேற்று (ஜன.1), வழக்கம் போல் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தமிழரசனிடம், முரளியின் மனைவி மேகலா, அவரது அக்கா நவநீதம், முரளியின் மாமியார் இந்திரகுமாரி, மாமனார் நாகராஜு, உள்பட நான்கு பேர் நிலத்தகராறு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், நான்கு பேரும் தமிழரசனை தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த தமிழரசன் மூச்சுத் திணறி மயக்கமடைந்துள்ளார்.
தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து, அவரை மீட்ட அவரது குடும்பத்தினர், ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே தமிழரசன் உயிரிழந்துள்ளார்.
காவல் நிலையம் முற்றுகை
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் காவல் துறையினர், தமிழரசனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழரசனை தாக்கி கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், குற்றவாளிகளை கைது செய்யாமல், தமிழரசனின் உடலை உடற்கூராய்விற்காக வாணியம்பாடி எடுத்துச் செல்லக்கூடாது என்று ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திரண்டு காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் விசாரணை
இதையடுத்து, ஆலங்காயம் காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் அந்நான்கு பேரையும் ஆலங்காயம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூரில் மண் சரிவால் விபத்து ஏற்படும் அபாயம்