தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக செயற்பாட்டாளர் வேல்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மார்ச் 19) தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, குரூஸ் பர்னாந்து சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், "வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்கள் நடுவது குறைந்திருக்கிறது. ஒரு வாகனத்தில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுவாயு சுத்தப்படுத்த ஆறு மரங்கள் தேவைப்படும் நிலை உள்ளது.
ஆனால், இன்றைய சூழலில் மரம், காடு என அனைத்தையும் அழித்து வாழ்விடங்கள் உருவாக்கப்படுகின்றன. மண்ணை நஞ்சாக்கும் இந்தச் செயலை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் ஏஜெண்டாகவும், பிரதமர் மோடி அகில உலக ஏஜெண்டாகவும் செயல்படுகின்றனர்.
கடலில் சிங்கள மீனவர்களின் அட்டூழியத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தமிழ்நாடு மீனவர்களை பாதுகாப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்ட நெய்தல் படை உருவாக்கப்படும். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகளில் பயிற்சி பெற்ற இரண்டு நெய்தல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
நாடு முழுவதும் குடிமக்களுக்கு மருத்துவம், கல்வி, குடிநீர் ஆகிய மூன்றும் இலவசமாக தரப்படும். கல்வியில் வியாபார நோக்கம் ஒழிக்கப்படும். புதிதாக அணு உலைகள் திறக்கப்படுவது தடுக்கப்பட்டு மறுசுழற்சி செய்யத்தக்க பசுமை வழியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்கப்படும்.
கல்வி முறை மாற்றி அமைக்கப்படும். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்விகள் கற்றுக் கொடுக்கப்படும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு தனிநபர் வருமானம் பெருகிட நாம் தமிழர் கட்சியில் ஆட்சியில் வழிவகை செய்யப்படும். இவை அனைத்தையும் செய்திட குடிமக்கள் ஒரே ஒரு வாக்கு மட்டும் விவசாயி சின்னத்திற்கு தந்தால் போதுமானது" என்றார்.
இதையும் படிங்க: 'பாஜக காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக’ - சீமான் தாக்கு