தூத்துக்குடி மாநகரத்தின் முக்கியச் சாலையான வி.இ.ரோட்டில் உள்ள அம்பாள் மதுக்கடையில் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையிலிருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடை பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. மதுக்கடையின் பூட்டை உடைக்கும் முயற்சி பலனளிக்காததால், அருகே உள்ள உயரமான கட்டடத்தின் வழியே டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த அவர்கள், கையில் கிடைத்த மதுபானப் பாட்டில்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (39), பிரவின்(30), சார்லஸ்(30), அந்தோணி(33) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவலர்கள், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் திருப்பமாக, போதை மாத்திரைகளை தின்று கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்படும் மாத்திரைகளை கந்தசாமிபுரத்திலுள்ள மருந்துக்கடை ஒன்றில் போதைக்காக வாங்கி, பயன்படுத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, மருந்துக்கடைக்காரர் டேவிட் (40) என்பவரையும் காவல் துறையினர் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: ரத்தத் சொட்ட மதுவை கொள்ளையடித்த மது வெறியன்