தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம், மாதப்புரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், எட்டயபுரம் அருகிலிருக்கும் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். டிராக்டரை பெரியசாமி என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது, எட்டயபுரம் மின்சார வாரியம் அலுவலகம் அருகே டிராக்டர் வந்த போது, தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த லாரி டிராக்டர் மீது மோதியது. இதில், டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து அதன் பாகங்கள் சிதறின. இந்த விபத்தில் டிராக்டரில் வந்த அந்தோணியம்மாள், கீதாராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டயபுரம் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மரகதம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த 8 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், விபத்து குறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் வெள்ளத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அவினாசி கோர விபத்து: 16 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்