திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிக்காக அங்கு குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பகுதிக்கு அருகே உள்ள கரையான் திடல் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு உள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். மேலும் இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியல் என பலகட்ட போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில் இதுவரை எந்தவித அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.
குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை இந்த அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சார வசதி இல்லாததால் இரவு நேரத்தில் ஒருவரை பாம்பு கடித்து உயிரிழந்த அவல நிலையும் நடந்தது. மேலும், குழந்தைகள் இரவு நேரங்களில் தங்களுடைய வீட்டுப்பாடங்கள் செய்யவும், படிக்கவும் முடியாத நிலையில் உள்ளனர். இதேபோல் தங்களுடைய கைப்பேசிகளை சார்ஜ் போடுவதற்குகூட நகர் பகுதிக்கு வந்து அதற்கான பணம் செலவிடும் அவல நிலையும் உள்ளது. வயதுக்கு வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட கழிவறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
அனைத்தும் உள்ளன. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை தங்களுடைய பகுதி சினிமாவில் வரும் அத்திப்பட்டி கிராமம் போன்று உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் எங்கள் கிராமத்துடன் நாங்களும் அழியும் நிலை ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு எங்களுக்கான அடிப்படைத் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்