திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சேஷாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஹர்ஷ வர்தனன்(55). இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல், வியாபாரத்திற்காக திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் பாலச்சந்திரன்(48), வேலு(49) ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன்பின், நேற்று மாலை ஹர்ஷ வர்தனை வீட்டிற்கு வழியனுப்புவதற்கு பேருந்து ஏறுவதற்காக பாலச்சந்திரனுடன் அவரது இருசக்கர வாகனத்தில் வேலு, பாலச்சந்திரன் ஆகியோர் சென்றுள்ளார். அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி, இந்த மூன்று பேரும் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலை, கால், கை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவ்வழியாகச் சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, வேலு, ஹர்ஷவர்தன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பாலச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருத்தணி காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இம்மாதிரியான விபத்தை தவிர்க்க, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தவறாமல் அனைவரும் தலைக்கவசம் அணிந்து கொள்வது அவசியம். அதே நேரத்தில் சாலையில் மிதமான வேகத்தில் செல்வதும்; இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே அமர்ந்து செல்வதும் முக்கியமான ஒன்று.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்றவர் கைது: அம்பலமானது எப்படி?