திருவள்ளூர் மாவட்டம் ஆவடி லாசர் நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம் கோபால் (54). ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி புனிதவதி திருவேற்காட்டிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று (டிச. 15) பிரேம்கோபாலுக்குத் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆட்டோ ஆவடி சி.டி.எச். சாலை, பேருந்து நிலையம் அருகே சென்றபோது பிரேம்கோபால் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உடனடியாக 108 அவசர ஊர்திக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவரச ஊர்தி ஊழியர்கள், சோதனை செய்தபோது, பிரேம் கோபால் உயிர் பிரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது உடலைக் கட்டிப்பிடித்து புனிதவதி கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : கிணற்றில் விழுந்த பெண் மயில்: உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!