கடம்பத்தூர் ஒன்றியம் பிரயாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுப்பாக்கம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்கு நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த தொட்டியில் இருந்து தினமும் அப்பகுதி மக்களுக்கு குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இதற்காக அருகே ஆழ்துளை கிணறு அமைத்து பைப்லைன் மூலம் தொட்டிக்கு நீர் ஏற்றப்படுகிறது. ஆனால், தற்போது இந்த தொட்டியை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆழ்துளை கிணற்றில் இருந்து, குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும்போது தொட்டி முழுமையாக நிரம்பியதும், சம்பந்தப்பட்ட பம்ப் ஆப்ரேட்டர் மின் மோட்டாரை நிறுத்துவதில்லை என தெரிகிறது.
இதனால், தொட்டியில் இருந்து வீணாக குடிநீர் நிரம்பி வழிவதாகவும், தாழ்வான இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீர் தொட்டியின் கீழ் உள்ள பைப்லைன் வால்வுகளில் இருந்து கசியும் தண்ணீரும் அங்கு சென்று தேங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தண்ணீரை வீணாக்கும் சம்பவம் அப்பகுதி மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாவதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், தண்ணீர் வீணாக வெளியேறுவதால் வறட்சிக் காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கடம்பத்தூர் ஒன்றிய அலுவலரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், தொட்டியிலிருந்து வீணாக குடிநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.