திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார்.திருத்தணியில் நேற்று திருத்தணி கமலா திரையரங்கம் அருகே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழ்நாட்டிற்கானஉரிமைகளை வென்றெடுக்க அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், 'எதிர் வேட்பாளர் திமுக ஜெகத்ரட்சகன் 10 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஆனால், தொகுதிக்காக ஒரு துரும்பைகூட செய்யவில்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு பண மூட்டையுடன் வருவார். இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். மது ஆலைகள் மற்றும் பல கல்லூரிகள் வைத்துள்ள அவர்இங்கு ஒரு பள்ளியோ, கல்லூரியோ, தொழிற்சாலையையோ அமைக்கவில்லை' என குற்றச்சாட்டினார்.
மேலும், அன்புமணி கூறுகையில், நாங்கள் வன்னியர்கள் சொத்தை அபகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேசிவருகிறார். எங்கள் பெயரில் ஒரே ஒரு சென்ட் வன்னியர் சொத்தை அபகரித்து விட்டோம் என்று சிபிஐ மூலமாகவோ (அ) நீதிமன்றம் மூலமாகவோ நிரூபித்தால் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் என சவால் விடுத்தார்.
நிரூபிக்க முடியவில்லையென்றால், நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். ஸ்டாலின் திமுக தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும்என அவர் தெரிவித்தார்.