திருவள்ளூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய விரோத சட்டமான புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சாமு நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் பூபதி, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, பெருந்திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி இந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், போராடிவரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச்சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும் நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ்ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தருமபுரி: தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் சுப்பிரமணி தலைமையில், தருமபுரி தொலைபேசி நிலையம் எதிரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவரும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
கோவை: கோவை திமுக மாநகர கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
வேலூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பின் நந்தக்குமார் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3ஆயிரம் திமுகவினர் கலந்துகொண்டனர். அப்போது, திடீரென போராட்டம் நடக்கும் கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸுக்கு திமுகவினர் உடனடியாக வழிவிட்ட நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தால் அரசிற்கு வருவாய் இழப்பு