செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் பகுதியை சேர்ந்த மதன் என்பவரும், புழல் கதிரவேடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழ்செல்வியை காணவில்லை என அவரது பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், மதனை விசாரத்த போது, தமிழ்செல்வியை கடந்த 26-ஆம் தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள சுற்றுலா தலமான கோனே அருவி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தியதாகவும், அதன்பின் அங்கேயே விட்டு விட்டு திரும்பியதாகவும் மதன் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது.
செங்குன்றம் காவலர்கள் மதனை கோனே நீர்வீழ்ச்சி பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் தமிழ்செல்வி இல்லாததால் அந்த மலையில் இருந்த வனத்துறை அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே மகளை காணவில்லை எனவும், மகளுக்கு என்ன நேர்ந்தது எனவும் கூறி அவரது பெற்றோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!