தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துவருகிறது. இந்நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக வர வேண்டும் எனக் கோரி நெல்லையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்கி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இது குறித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், நெல்லை மாவட்ட ஆவின் தலைவருமான சுதா பரமசிவன் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக அதிமுக எந்நிலையிலும் தயாராக உள்ளது. ஏனெனில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்பற்ற முதல்வராக செயல்பட்டு வருகிறார். நோயிலிருந்து எப்படி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு சிறப்பாக செயல்படுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் கட்டி பாதுகாத்து வருகிறார். இந்தியாவின் ஒப்பற்ற முதலமைச்சராகவும் பழனிசாமி உள்ளார். எனவே அவர்தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பொதுமக்களும் ஆசைப்படுகிறார்கள். திமுக எந்த சூழலிலும் ஆட்சிக்கு வராது. ஸ்டாலின் என்றும் முதலமைச்சராக முடியாது. மக்கள் திமுகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமிக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசி உள்ளது. கட்சிக்குள் எந்த போட்டியும் இல்லை. அவருக்கு எதிராக எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதிமுகவில் சாதாரண தொண்டனும் பெரிய பதவிக்கு வரமுடியும். ஜெயலலிதா இந்த இயக்கத்தை அவ்வாறு உருவாக்கியுள்ளார். எல்லோரும் கட்சியை ஒழித்துவிடலாம், ஆட்சியை ஒழித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எனவே இரட்டை இலைதான் வரும் தேர்தலில் வெற்றிபெறும்” என தெரிவித்தார்.
பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அக்கட்சியை சேர்ந்த விபி.துரைசாமி கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். நாங்கள் யாரையும் தேடிப்போகமாட்டோம். அவர்கள்தான் எங்கள் தலைமையில் வருவார்கள்” என்று தெரிவித்தார்
இதையும் படிங்க:பழனிசாமி தலைமையிலேயே அதிமுக களம் காணும் - ஆர்.பி.உதயகுமார்