தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள இ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன். தோட்டத் தொழிலாளியான இவர், கும்பக்கரை அருவி அருகே செலும்பாற்று பகுதியில் உள்ள மாந்தோப்பில் வேலை முடித்துக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற காட்டு மாடு ஒன்று நீலகண்டனை முட்டித் தாக்கியுள்ளது.
இதில், அவரது குடல் முழுவதும் வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். குடல் வெளியே வந்த நிலையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தவரின் சத்தம் கேட்டு வந்த பக்கத்து தோட்டக்காரர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, நீலகண்டனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாள்கள் தனிமை - சென்னை மாநகராட்சி