தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் இ பிரிவில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவர் இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட வேலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் OA -வாக பணிபுரிந்து வருகிறார்.
வனிதா தனது சித்தி பையனான பிரகாஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொடுத்த நிலையில், மீதமுள்ள 50 ஆயிரத்தை வனிதா திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்திலும் வனிதா மீது பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.
ஆனால் புகார் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் வனிதா வீட்டிற்கு தனது காதலி மகேஸ்வரி, நண்பர் சூர்யா ஆகியோருடன் வந்த பிரகாஷ் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வனிதா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் வனிதாவின் குழந்தைகள் கண்முன்னே வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
குழந்தைகள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது, வனிதா மற்றும் கனகராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கைப்பந்துப் போட்டியால் வந்த பகை - இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!