தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிரமான கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தானாக முன்வந்தும், தன்னார்வலர்களைக் கொண்டும் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கால் வேலையிழந்து உணவின்றித் தவித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தென்காசி நகர காவல் ஆய்வாளர் ஆடிவேல் நேரடியாக வீட்டிற்கே சென்று உதவி செய்ததை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டிவருகின்றனர்.
தென்காசி மேலமாசி வீதியில் மின்னணுப் பொருள்கள் பழுதுபார்க்கும் கடை நடத்திவருபவர் மூர்த்தி. மாற்றுதிறனாளியான இவர், ஊரடங்கால் கடந்த மூன்று வாரங்களாகக் கடைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் வருமானமின்றி தவித்துவந்த இவர், தன்னிடமிருந்த சேமிப்புகளைக் கொண்டு சில நாள்களைக் கடத்தியுள்ளார்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் உணவிற்கு வழியின்றித் தவித்த அவர், தனது நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.
![tenkasi incident aided physically challenged person who has lost his job due to the extension of curfew.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-02-tenkasi-policeinspector-helped-electrician-image-scrpt-7205101_15042020170546_1504f_1586950546_440.jpg)
இதனையறிந்த தென்காசி நகர காவல் ஆய்வாளர் ஆடிவேல், அவரது வீட்டிற்கே சென்று ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார். மேலும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக தன்னை அணுகும்படியும் கூறியுள்ளார். இவரது இந்தச் செயலை மக்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்!