மகரிஷி என்கிற பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாளர். மே 1, 1932ல் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், டி.என். கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு பிறந்த இவர், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளிப்பருவத்திலேயே எழுதத் தொடங்கி விட்டார்.
தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை திகழ்ந்த இவர், சுமார் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் புதினம் "பனிமலை" வெளிவந்து சில வருடங்களிலே 1965ல் "என்னதான் முடிவு" என்ற திரைப்படமாக வெளிவந்தது.
இதுமட்டுமல்லாமல் இவரது மற்ற புதினங்களும் தொடர்ந்து திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றது . பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), நதியை தேடி வந்த கடல் (1980) உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வெள்ளித்திரையில் பெரிய வெற்றியை பெற்றது.
தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷியுடையது மட்டுமே. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியை தேடிவந்த கடல்’ இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
இவரது இயற்பெயர் பாலசுப்பரமணியம் என்றாலும் அந்த பெயரில் எழுதாமல் தொடர்ச்சியாக மகிரிஷி என்ற புனைப்பெயரிலே எழுதி வந்தார். இந்து மதத்தின்மீது கொண்ட பற்றாலும், ஞானிகள்மீது கொண்ட பெருமதிப்பாலும் 'மகரிஷி' என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார்.
இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமானதாக 'ஸ்படிகம்' குறுநாவலைச் சொல்லலாம். காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் இப்படைப்பு கல்கியில் வெளியானது. இதனைப் பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் 'Pure As a Crystal' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரே தெலுங்கிலும் இதனை மொழிபெயர்த்திருக்கிறார்.
'பூர்ணிமா' என்ற இவருடைய நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் புகழ்பெற்றது. 300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய இவர், கல்கி சிறுகதை போட்டிப் பரிசு, எழுத்துச் சித்தர் விருது, நாவல் திலகம், நாவல் மணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இத்தனை சிறப்புகளுக்கு சொந்தக்காரரான நாவலாசிரியர் மகரிஷி, நேற்று இரவு 9.00 மணியளவில் சேலத்தில் அவரது வீட்டில் காலமானார். அவரது உடல் சேலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவாரா ? பதிலளித்த சந்திரசேகர்