சேலம்: சிவதாபுரம் அருகே உள்ள கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா(50). இவருக்கு திருமணம் ஆகி மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளி பொருட்கள் தயாரிப்பு பட்டறையில் கூலி வேலை செய்துள்ளார்.
இந்நிலையில், அமுதாவிற்கு அதே வெள்ளிப் பட்டறையில் வேலை செய்த பொழுது தங்கராஜ்(38) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். மேலும் அமுதா குடும்ப வறுமையின் காரணமாக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், மீனா, வசந்த் ஆகியோர், அமுதா பெற்ற ஆறு லட்ச ரூபாய் கடன் குறித்து அமுதாவிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியதாகவும், அதன் பிறகு அமுதா, தங்கராஜிடம் கடனை அடைக்க பணம் கேட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
![சேலத்தில் பெண்ணை கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை.. தகாத உறவு காரணமா?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-08-2023/19330532_sucidecard.jpg)
அப்போது ஆத்திரம் அடைந்த தங்கராஜ், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அமுதாவை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அமுதா உயிரிழந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அமுதா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கராஜ், காவல்துறைக்கு பயந்து தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை போதை பொருள் கும்பல் தலைவன் கைது - 10 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பின்னணி!
இன்று (ஆக 22) காலை வீட்டின் அருகே உள்ளவர்கள் சென்று பார்த்த பொழுது, இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து உடனடியாக சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கும் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவில் இருந்த பெண்ணை அவரோடு தகாத உறவில் இருந்த ஆண் கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டு உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.