சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நேற்று (பிப். 6) 700 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டிக்காக சேலம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, ஆத்தூர், உலிபுரம், துறையூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து காளைகள் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்பட்டன.
போட்டியில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்தம்பி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேர், சுகாதாரத்துறை அலுவலர்கள், கால்நடைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், குடம், சேர், கட்டில் போன்றவை பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியை தம்மம்பட்டி, ஆத்தூர் வாழப்பாடி , மல்லியரை மற்றும் இதைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பார்வையிட்டனர்.