ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள எமரால்டு ஓட்டலில் “மலரும் நினைவுகள்” எனும் தலைப்பில் 1987இல் கல்வி பயின்ற அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 35 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் தின விழா கொண்டாடி அசத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிப்காட் அருகே உள்ள லாலாப்பேட்டை பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1987ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் விதமாக மலரும் நினைவுகள் என்னும் தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் 1987ஆம் ஆண்டில் லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவர்களைச் சந்தித்தனர்.
இதற்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னாள் மாணவர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் லாலாப்பேட்டை அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய ஆசிரியர்கள், 35 ஆண்டுகளைக் கடந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் மீது வைத்துள்ள அன்பிற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளி பருவத்தின் நினைவுகளை ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதேபோல, வறுமையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களின் படிப்பிற்கு முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் நிச்சயம் உதவி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பள்ளியில் பயிலும்போது போடப்பட்ட சண்டைகள் மற்றும் அழகிய தருணங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். மேலும், ஆசிரியர்களிடம் வீட்டுப்பாடம் எழுதாவிட்டால் அடி வாங்கியதையும் நினைவு கூர்ந்தனர். தாங்கள் இருந்த இருக்கையில் நடந்த சம்பவங்களையும் நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர். இறுதியில் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: ஒரு மாணவர் கூட சேராத 11 பொறியியல் கல்லூரிகள்.. கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும் காரணம் என்ன?