ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருவாடானையில் இருந்து ஆதியூர் வழியாக 50 ஆண்டுகளுக்கு முன்பாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் கண்மாய்கள் வழியாக மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் அடிக்கடி மின் பழுது ஏற்பட்டு மூன்று நாட்களுக்கும் மேல் மின்சார தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மின் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் உதய் மின் திட்டத்தின் கீழ், மாற்றுவழி பாதையில் மின்சாரம் கொண்டுவர திட்டமிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 30 மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றினார். பின் கிடப்பில் போட்ட அப்பணிகளை விரைவில் முடித்து தர வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து திருவெற்றியூர் கிராம இளைஞர்களும், பொதுமக்களும் காட்சிப் பொருளாய் நிற்கும் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து பேசிய கிராம பொது மக்கள், ’நாங்கள் பல நாட்கள் மின் தடையால் அவதிப்பட்டு வருகிறோம்.ஆனால் இதை கண்டுகொள்ளாத வாரிய அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்’ என குற்றம் சாட்டினார்.