தமிழ்நாடு முழுவதிலும் கரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டு கடந்த 10 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்களுக்கு இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திக்கவுள்ளதைக் கருத்தில் கொண்டு கடந்த வாரம் பெற்றோர்களிடம் தமிழ்நாடு அரசு சார்பாக அந்தந்த பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து பெற்றோர்களும் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு கல்வி அளித்து தேர்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதிலும் இன்று (ஜன.19) முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக அனைத்துப் பள்ளிகளிலும் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு பணிகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என்ற வீதத்தில் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (ஜன.19) ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 269 பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 17 ஆயிரத்து 719 பேர், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 15ஆயிரத்து 15 பேர் என் மொத்தம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தாங்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்ற மனநிலையில் பள்ளிகளுக்கு வந்தடைந்துள்ளனர். ஆசிரியர்களும் மாணவர்களை தேர்வுக்குத் தாயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் பள்ளிகள் திறப்பு:
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவு படி இன்று முதல் 348 அரசு அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆட்சியர் உமாமகேஸ்வரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்டத்திலுள்ள 348 பள்ளிகளிலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் இன்று (ஜன.19) முதல் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் வருகை தரும்போது அவர்கள் கையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது அவர்கள் விருப்பத்தின் பேரில்தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பள்ளியை கண்காணிக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு!