ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 27 வயதான பெண் செவிலி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் சீல்வைக்கப்பட்டது. செவிலி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
இவர், சுகாதாரப் பணியாளர்களுக்கென இயக்கப்படும் சிறப்பு அரசுப் பேருந்து மூலமாக ராமநாதபுரத்திலிருந்து உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுவந்துள்ள நிலையில், பேருந்தில் பயணம்செய்த மருத்துவர்கள்,செவிலியர் உள்பட அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் மேற்கொண்டுவருகின்றன.
மேலும், அவரது குடும்பத்தினர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த சுகாதாரப் பணியாளர்களுக்கான கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளதால், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சுகாதார ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி!