ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் இன்று (ஜூன் 23) முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார்.
விவசாயியை தாக்கிய அலுவலர்கள்
பின்னர் இவர் அலுவலர்களிடம், 'மனுக்கள் மட்டும் பெற்றுக்கொண்டு எந்தவொரு நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கிருந்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் பழனி என்பவரும், விவசாயி பூபதியை சரமாரியாக தாக்கி தாலுகா அலுவலகத்திலிருந்து விரட்டிவிட்டனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியர் செந்தில்குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, விவசாயி மது போதையில் வந்து ஜமாபந்தியை நடத்தவிடாமல் அலுவலர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.