இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கூறியதாவது, 'பொது ஊரடங்கில் பல்வேறு அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்களித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைக்கப்பட்டு, மீனவர்கள் ஜுன் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மீன்உற்பத்தி, படகு பராமரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஜுன் 15ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதாகப் பல்வேறு மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதுபோல, மீன் உற்பத்தி தரத்தினை மேம்படுத்திட 24 மணி நேரமும் மீன்பிடிப்பைத் தவிர்த்து, தற்காலிகமாக 12 மணிநேர மீன்பிடிப்பு முறையை அரசு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எனவே, இதனை மீனவர்கள் முறையாகப் பின்பற்றிட வேண்டும். மேலும், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் மீன்பிடியில் கிடைக்கும் மீன்களை, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலையில் கொள்முதல் செய்திட வேண்டுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளில் போதிய தகுந்த இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்திட வேண்டும். மீன் ஏலக்கூடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்த்திடும் வகையில் ஏலமிடுவதற்கு குறிப்பிட்ட காலநேரம் நிர்ணயிக்கப்படும்.
மேலும் மீன்படித்துறைமுகம் இறங்குதளங்களில் சில்லறை வியாபாரம் செய்வதை கட்டாயம் தவிர்ப்பதோடு, மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வலைகள், மீன்பிடி முறைகளை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்ரா, மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மீன் ஏற்றுமதியில் சிக்கல்: அல்லல்படும் கடல் ராசாக்கள்!