தமிழ்நாட்டிற்குள் ஆறு பயங்கரவாதிகள் இலங்கை வழியாக ஊடுருவி, கோவைக்குச் சென்று சதிச் செயலில் ஈடுபட இருப்பதாக மத்திய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய ஆலயங்கள், தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கடலோர மாவட்டங்களிலும் கப்பல் படை, கடலோரக் காவல் படை ரோந்து பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ராமநாதபுர மாவட்டம் தனுஷ்கோடி அடுத்துள்ள அரிச்சல்முனையிலிருந்து கடல் மார்க்கமாக 14 கிலோமீட்டரில் இலங்கையை அடைந்து விடலாம். கடந்த 2017ஆம் ஆண்டு எம்ஆர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலை, 50 கோடி ரூபாய் மதிப்பில் செப்பனிடப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
அதில் பொருத்தப்பட்ட சூரிய ஒளி விளக்கு ஒரு மாதம் வரையில் மட்டுமே எரிந்தது. அதன் பின் பழுதாகி தற்போது வரை பயனற்று இருப்பதாகவும், அது இருந்தால் மாலை நேரங்களில் சந்தேகத்திற்கு இடமான ஆள் நடமாட்டம் இருந்தால் எங்களால் காவல்துறை தெரிவிக்க இயலும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கண்காணிப்பு படக்கருவிகள் இருந்தால் காவல்துறையே எளிதில் கண்டறிய முடியும் என்றும் எனவே உடனடியாக இவற்றைப் பொருத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அரிச்சல்முனையில் காவல்துறையினருக்கு போதிய தங்கும் வசதி செய்து தர வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.