நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 77 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக கரோனா வைரஸ் தொற்றில்லா மாவட்டமாக நாமக்கல் உள்ளது.
இங்குள்ள மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யும் கிட் இல்லாததால் சேலம், கோவை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. மேலும், தொடர் இருமல், சளி உள்ளவர்களை பரிசோதனை செய்யவும், முடிவுகளை அறிந்து கொள்ளவும் கால தாமதம் ஆகிவந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றுகளை உடனுக்குடன் கண்டறிய, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா பரிசோதனை மேற்கொள்ள RTPCR (Real Time Polimerized Chain Reaction) மையம் அமைக்க, சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைகளுக்கான கருவிகள், துறை வல்லுநர்கள், கட்டட வசதிகள் குறித்து மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது.
இதனையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் RTPCR பரிசோதனை மையம் அமைக்க ICMR அனுமதி அளித்தது. பின்னர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் தொடங்கி வைத்து, ஆய்வகத்தின் செயல்பாடுகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து, கரோனா தொற்றால் கடந்த 2 மாதமாக ஆட்டோக்கள் இயங்காத நிலையில் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், ஆடோக்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவின் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், ஒரு கிலோ கடலை பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள் - அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!