மதுரை: உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா, அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறும். தேவர் குருபூஜை அரசு விழாவாகவும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவும், மற்றும் 59வது குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பசும்பொன்னிற்கு சென்று மரியாதை செலுத்துவர்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் முளைப்பாரி எடுப்பது, பொங்கல் வைப்பது, அபிஷேகம் செய்வது போன்றவற்றை பசும்பொன் கிராமத்தில் முன்னெடுப்பர். பொதுவாக தனியார் வாகனங்களில் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இந்த மரியாதையைச் செய்வது வழக்கம். இந்த ஆண்டும் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு தனியார் வாகனங்களில் சென்று மரியாதை செலுத்த அனுமதிக்க கோரி மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
ஆகவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,"தேவர் ஜெயந்தி விழாவில் 2017-ல் இருந்த சூழல் தற்போது இல்லை.
2017-ல் பிற மாவட்டங்களில் இருந்து வருவோர்கள் பசும்பொன்னிற்குச் செல்வதற்காக மாவட்ட எல்லையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
தற்போது தேவர் ஜெயந்தி விழாவை அரசு அமைதியாக நடத்த விரும்புகிறது. தேவையெனில் மனுதாரர் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் கரோனா நோய் பரவலும் உள்ளது. இந்தச் சூழலில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால் அது நோய் பரவல் அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும். எனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு தனியார் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது" எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!