ஆய்வக நுட்பனர்கள் அனைவருக்கும் பொது கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் வழங்கக் கோரிய தேனி மாவட்டம் வீரபாண்டி மேல்நிலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பனராக (நிலை-3) பணிபுரியும் பத்மா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கடந்த 29.10.2018 முதல் வீரபாண்டி மேல்நிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் மெடிக்கல் யூனிட்டில் ஆய்வக நுட்பனராக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகிறேன். 2018ஆம் ஆண்டு 714 ஆய்வக நுட்பனர் ( நிலை 3) பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதில் 350 பேர் MMUவிலும்,மீதம் 364 பேர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணிபுரிந்துவருகின்றனர். எனக்கு வழங்கப்பட்ட சீனியாரிட்டி அடிப்படையில் (MRP 196) உள்ளேன். பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு தொகுப்பூதியம், காலமுறை ஊதியமாக மாற்றிய பிறகு பொது கலந்தாய்வின் மூலம் பணியிடமாற்றம் மேற்கொள்வார்கள்.
கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படாமல் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் மேற்கொள்வார்கள். தற்பொழுது எம்.ஆர்.பி சீனியாரிட்டியில் பின்னால் உள்ள பணியாளர்கள் பொது கலந்தாய்வு இல்லாமல், குறுக்குவழியில் பணி மாறுதல் பெற்று, பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பொது கலந்தாய்வு இல்லாமல் பணிமாறுதல் செய்தால் எம்.ஆர்.பி சீனியாரிட்டியில் முன்னிலையில் உள்ள நான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவோம். எனவே தற்போது குறுக்கு வழியில் பணியிட மாற்றம் செய்தவர்களை ரத்து செய்து சீனியாரிட்டி அடிப்படையில் பொது கலந்தாய்வு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதே கோரிக்கையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வக நுட்பனராக பணி புரியும் பானு என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வழக்கையும் ஒன்றிணைத்து ஒருங்கே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையானது விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த மனுவானது, நீதிபதி நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 16 ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறுகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். அப்போது மனுதாரர் தரப்பில், ’எம்.ஆர்.பி சீனியாரிட்டி அடிப்படையில் பொது கலந்தாய்வு நடைபெற வேண்டும். மேலும், பொது கலந்தாய்வுக்கு முன்னதாக நடை பெற்ற பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை’ என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறை இயக்குநர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய செயலர் ஆகியோர் உடனடியாக பதில் அளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்த நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் 16 ஆம் தேதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : வரும் சட்டப்பேரவையில் தேர்தலில் இரு தொகுதிகளில் டிடிவி தினகரன் போட்டி!