பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது - மதுரை உயர் நீதிமன்றம்..! - நீதிபதி பாரதிதாசன்
Palani temple encroachments: பழனி கோயில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கில் இனி வரும் காலங்களில் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jan 9, 2024, 7:28 PM IST
மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், கிரிவலப்பாதையில் உள்ள ஏராளமான ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது.
சுமார் 30 ஆண்டுகளாக கோயில் இடங்களை 160 கடைகள் ஆக்கிரமித்து உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள இடங்களை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க 24 மணி நேரமும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கிரிவல பாதைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யாத அளவிற்கு சாலைகளில் தடுப்புகள் அமைக்க உள்ளது" என்று தெரிவித்தார்.
கோயில் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின் படி "ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மேலும், கிரிவலப் பாதையில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வருவாய்த் துறையினர் சிலருக்கு பட்டா கொடுத்துள்ளதை ரத்து செய்து, அதனை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில் இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யாத அளவிற்கு நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், "நீதிமன்ற உத்தரவின் படி தற்காலிக ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டு உள்ளது. பழனி கோயில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பழனி முருகன் கோயிலை சுற்றி உள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. இனி வரும் காலங்களில் பழனி கோயிலை சுற்றி உள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: "பெண் பக்தர்கள் போதையில் சாமி ஆட்டம்" - பழனி கோயில் உதவி ஆணையர் மீது வலுக்கும் புகார்!