மதுரை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல் குவாரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாறைகள் சரிந்து விபத்து நடந்தது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
அதன் பின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குவாரியை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட குவாரியின் உரிமையாளரான குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எங்கள் குவாரி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர். எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்து உள்ளனர். நாங்கள் குவாரியை நடத்தவில்லை. குவாரியை குத்தகைக்குதான் கொடுத்திருந்தோம்.
இதனால் குவாரியை தொடர்ந்து நடத்தவும், வாகனங்களை விடுவிக்கவும், வங்கிக் கணக்கை செயல்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே விசாரித்தபோது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ”மனுதாரரின் குவாரி விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது” என்றார். இதனையடுத்து நீதிபதிகள், “சுரங்கம் மற்றும் கனிம வளச் சட்டப்படி, வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் வருவாய்த் துறையினருக்குத்தான் உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளிலும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது.
ஆனால், அரசாணையில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாக வருவாய்த் துறையினருடன், காவல் துறையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இதில் இறுதி முடிவு எடுக்க இந்த வழக்கு 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது” என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், தண்டபாணி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்து முடித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “வாகனங்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல் துறையினருக்கு உள்ளது. கனிம வளங்களை விசாரிக்கும் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவை இந்த வழக்கை விசாரணை செய்வது, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பது போன்ற முடிவுகள் மட்டுமே எடுக்க முடியும்.
இதில் விசாரணை அதிகாரிகளாக உள்ள காவலர்கள் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு விதிகளின்படி அதிகாரம் உள்ளது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழகத்தின் முக்கிய கஞ்சா வியாபாரிகள் கைது: ஆந்திராவில் அதிரடி காட்டிய மதுரை போலிஸ்